Thursday, January 14, 2010

சூரியனுக்கு ஒரு பொங்கல்

குளிர் காற்று வீசுகிறது!
போர்வையை விலக்கிக்கொள்ள
விரும்பாமல்
எட்டிக் கிடந்த
மொபைல் அலாரத்தை நிறுத்திவிட்டு
மீண்டும் போர்வைக்குள்
அடுப்பு மூட்டிக்கொண்டு...

சன்னல் கண்ணாடிக்கு வெளியில்
சூரிய வெளிச்சம்
தட்டிக்கொண்டிருந்தது;
வீட்டுப்பெண் எழும்பி
பாத்திரப் பண் சமைத்தாள்
"எல்லோரும் எழும்புங்க,
எழும்புங்க" என்றொரு
கீதம் இசைத்தாள்!
படுக்கை சுருட்டப்பட்டது!

பொங்கல் பானை;
விசம் குடித்த வேதணையில்
நுரைதள்ளிக்கொண்டு
இறந்துபோன விவசாயிகளை
எண்ண வைத்தன!

பொங்கல்,
வடை,
பழங்கள்
படைக்கப்பட்டன.

பொங்கல் வாழ்த்துக்கள்
பரிமாறப்பட்டன!

விவசாய நிலங்களிலிருந்து
வீசி எறியப்பட்ட கைகள்
வாயிற் கதவில் பிச்சைக்காக
ஏந்திகொண்டு நிற்கின்றன
விடுதலைக்கான ஆயுதங்களை
முதுகில் சுமந்துகொண்டு...

சூரியன்கள் மூளைக்குள்
சுவாலைகளை விதைக்க
சம்பிராதயக் கணக்கில்
முடிந்துபோனது
சூரியப் பொங்கல்!

- சக்திவேல்

No comments: